×

தி.மலை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம்; பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி: அண்ணாமலையாருக்கு 1,008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 2ம் நாளான நேற்றிரவு உற்சவத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார் பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர், ராஜகோபுரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என பக்தி பெருக்குடன் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மேளதாளம் முழங்க மாட வீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபத்திருவிழாவின் 3ம் நாளான இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டதும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

சுவாமி தரிசனத்துக்காக அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. காலை 11 மணி அளவில், ராஜகோபுரம் எதிரில் இருந்து காலை உற்சவம் தொடங்கியது.  மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூதவாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்றிரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் பிரியாவிடை சிம்ம வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனர்.


Tags : D. Malai Deepatri Vizah ,Chandrasekar Bhavani ,Bhutha ,Vahanam ,Annamalai , 3rd day festival of D. Malai Deepatri Vizah; Chandrasekhar Bhavani in Bhutha Vahanam: 1,008 sangabhishekam for Annamalai
× RELATED தி.மலை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம்;...