சென்னை: காசோலை மோசடி வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரடெக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தேன். துஷ்யந்துக்கு ரூ.30 லட்சம் கடன் கொடுத்தேன். அதற்காக துஷ்யந்த், தலா 15 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகளை கடந்த 2019ம் ஆண்டு அளித்தார்.
ஆனால், போதிய பணம் இல்லாததால் இரண்டு காசோலைகளும் திரும்பி வந்துவிட்டது. வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு காசோலை அளித்ததுள்ளனர். இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு பதிலளிக்காததுடன் எங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை. எனவே, துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி, பணத்துக்கு உத்தரவாதம் அளித்த ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி மாதம் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது.