அண்ணாநகர்: கோயம்பேடு 100 அடி சாலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு வாலிபர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்று கொண்டு அங்கு இருந்து கீழே குதித்ததில் தலை, கை, கால், முதுகு எலும்பு முறிந்து ரத்தக்காயத்துடன் துடித்தார். அப்போது, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வாலிபர் காலை 10 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனையில் இருந்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அந்த வாலிபர் மேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது தெரிந்தது. இந்த காட்சியை வைத்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர் பெயர், வயது, முகவரி ஆகியவைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாலிபர் தற்கொலை செய்துகொண்டதற்கு கடன் பிரச்னையா அல்லது குடும்ப பிரச்னையா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.
* இரண்டாவது சம்பவம்
கடந்த ஆண்டு 26.6.21 அன்று, விழுப்புரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த செந்தில் (35) என்ற வாலிபர், இந்த மேம்பாலத்தின் மீது ஏறி நின்றுகொண்டு போதுமான சம்பளம் கிடைக்காததால் எனது குடும்பத்தை நடத்த முடியாமல் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று சத்தம் போட்டு கூறிவிட்டு திடீரென்று கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர், தற்கொலை செய்யும் வீடியோ காட்சியும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, அதே இடத்தில் 2வது முறையாக மற்றொரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.