சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சைதை மேற்கு பகுதி இளைஞரணி செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த 2 நாட்கள் வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பணிகளுக்கு 2 சதவீதம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சீனாவில் 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சை வழங்கப்படுவதாக பொய்யான தகவல் பரவி வருகிறது. தினந்தோறும் 6 லட்சம் முதல் 7 லட்சம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். 10 ஆயிரம் அறுவை கிசிச்சைகள் நடக்கிறது. நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. தமிழக அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.