×

பூக்கடை பகுதிகளில் மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: பூக்கடை பகுதியில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னையில் போதைப்பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தளவாய் சாமி  தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் வால்டாக்ஸ் ரோடு, டிஎன்பிஎஸ்சி ரோடு மற்றும் நைனியப்பன் மேஸ்திரி தெரு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 4 பேர் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த திருவொற்றியூரை சேர்ந்த முனுசாமி (62), அயனாவரம் வீராசாமி தெருவை சேர்ந்த சந்தியா (40), பார்க் டவுனை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37), நைனியப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த அனில்குமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தியா மீது ஏற்கனவே மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு வழக்கும், கிருஷ்ணமூர்த்தி மீது 7 வழக்குகளும், அனில்குமார் மீது ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. பிறகு, நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : 4 people arrested including a woman who sold alcohol in flower shop areas
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...