அகமதாபாத்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அகமதாபாத் நகரில் நடைபெற்ற உத்தரப்பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மகாராஷ்டிரா கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் இருந்தே உத்தரப்பிரதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சதம் அடித்த பின் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 150 ரன்கள் எடுத்து வீரநடை போட்ட ருத்துராஜ் கெய்க்வாட் சுழற்பந்து வீச்சாளர் சிவா சிங் வீசிய 49வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார்.
முதல் 3 பந்துகளை ருத்துராஜ் சிக்சர் பறக்கவிட 4வது நோ பால் என அறிவிக்கப்பட்டது. அதிலும் சிக்சர் அடித்து நொறுக்கிய ருத்துராஜ், கடைசி 2 பொந்துகளிலும் சிக்சர் விளாசினார். ருத்துராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 16 சிக்சர்களுடன் 220 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னிங்ஸ் முடிவில் மகாராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்த ருத்துராஜ்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.