சென்னை: வளர்ந்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால் அமைச்சர் பொறுப்புக்கு எல்லா தகுதியும் உடையவர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாபேட்டையில் மெகா மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. சென்னை தெற்கு மாவட்டத்தில் அடுத்த 10 நாட்கள் 300 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இளைஞர் அணி செயலாளரை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க அனைத்து தகுதிகளும் உள்ளது.
இளைஞரணி செயலாளர் என்பது துணை அமைப்பாக இருந்தாலும், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அடித்தளம் வலுவாக இருப்பதற்கு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி உள்ளார். இந்தியாவில் மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் எல்லாக் கட்சிகளும் தொடங்குகிறபோதே இளைஞரணி என்பதை சம்பிரதாயத்திற்காக தொடங்குவார்கள். ஆனால் திமுகவில் இளைஞர் அணி அமைப்பு சம்பிரதாயத்திற்கான அமைப்பு அல்ல. சமூகத்திற்காக உழைக்கின்ற அமைப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.