சென்னை: கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு ஓராண்டு பயிற்சி போதும் என்று கோயில் பூசாரிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது
கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி. வாசு வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக பயிற்சிப் பள்ளிகளும் துவங்கப்பட்டன. மேலும் அர்ச்சகர் பயிற்சியை 5 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக ஓராண்டு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த ஓராண்டுப் பயிற்சிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேதம், ஆகமம், சாஸ்திரம் ஆகிய விதிகளை முறைப்படி கற்க பத்தாண்டுகள் ஆகும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓராண்டுப் பயிற்சிக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் பரப்பி வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. வேத ஆகம சாஸ்திர விதிமுறைகளைக் கற்க ஓராண்டே போதுமானது.