சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோயில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் மற்றும் கோயிலின் பெயர், இறைவன் - இறைவியர் பெயர், சைவக் கோயில் எனில் பாடல் பெற்ற கோயிலா, வைப்புத்தலம் பாடிய நாயன்மார்கள் பெயர்/பெயர்கள் யாவை. கோயில் வைணவக் கோயில் எனில் மங்களாசாசனம் பெற்ற கோயிலா.
பாடிய ஆழ்வார்கள் பெயர்கள் யாவை. கோயில் முருகன் கோயிலா, படைவீட்டில் ஒன்றா திருப்புகழ், பிள்ளைத்தமிழ் போன்ற பாடல்கள் பாடப்பெற்ற கோயிலா. கல்வெட்டுச் சான்றுகள் உள்ளனவா. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது. வரலாற்றுக்கு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா. கோயில் வழிபாடு எந்த ஆகமத்தின்படி நடைபெறுகிறது. கட்டுமான ஆகமம் எதுவோ அதே ஆகமப்படி தான் வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா. கோயில் வழிபாடு குறிப்பிட்ட ஆகமப்படி நடைபெறவில்லை என்றால், வேறு ஏதேனும் ஆகமபந்ததியில் நடைபெறுகிறதா. கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது? என்றால் எந்த நாளிலிருந்து எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன. அது எதில் தொடங்கி எதில் முடிகிறது.
கோயிலில் தேவியுடன் சுவாமியா அல்லது, பிராட்டிக்குத் தனி சந்நிதி உள்ளதா. கோயிலில் பாஞ்சராத்ரப்படி பரம் வியூகம், விபவம், அந்தர்யாமித்யம், அரிச்சை ஆகிய இவ்வகை வழிபாடுகளும் நடைபெறுகின்றனவா. கோயில் வடகலையைச் சேர்ந்ததா அல்லது தென்கலையைச் சேர்ந்ததா. கோயில் வழிபாட்டில் மந்திராசனம், ஸ்நானாசனம், அலங்காராசனம். போசன ஆசனம்.
புனரி மந்த்ராசனம், பரியங்காசனம் ஆகிய ஆறு ஆசனங்களும் கற்பிக்கப்பட்டு முறைப்படி வழிபாடு நடைபெறுகிறதா. கோயில் அர்ச்சகர்கள் ஆகமப்படி தாபம் என்கிற வகை தீக்கையால் தோளில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டவர்களா. எவ்வகைத் தீக்கை பெற்றவர்கள். கோயில் அகோபில மடத்தைச் சார்ந்ததா ஜீயர் மடத்தைச் சார்ந்ததா. மார்கழி மாதம் முன்பத்து, பின்பத்து விழா கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.