சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் இரட்டை இலை சின்னமும் கட்சி பெயர் இருப்பதனால் மட்டுமே தொண்டர்கள் இருப்பதாக இபிஎஸ் நினைத்து வருகிறார். ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தாலும் அதனை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது.
அந்த அளவுக்கு அதிமுக கட்சியை பலவீனப்படுத்திவிட்டனர். ஏற்கனவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர சசிகலாவால் தான் முடியும் என கூறியிருந்தேன். இதில் என்னுடைய உதவியோ அல்லது தேவையோ இல்லை என்பதை கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை.