புதுடெல்லி: உச்ச நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முதலில் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்திய ஜனாதிபதி முர்மு, பின்னர் இந்தியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அவர் இந்தியில் பேசுகையில், ‘சிறிய கிராமத்திலிருந்து இங்கு வந்துள்ளேன்.
ஆசிரியர், டாக்டர், வக்கீல் ஆகியோரை நாம் கடவுளாக கருதுவதைப் பார்த்திருக்கிறோம். அறிவைக் கொடுப்பது ஆசிரியர்; உயிரைக் காப்பாற்றுவது மருத்துவர்; நீதி வழங்குவது வழக்கறிஞர்கள். ஆகவே இவர்கள் மூவரும் கடவுளின் அடையாளமாக உள்ளனர். சிறையில் உள்ளவர்கள் குறித்து நீதிபதிகள் சிந்திக்க வேண்டும்.
அவர்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அவர்களை மீட்கும் தைரியம் அவர்களது குடும்பத்தினருக்கு இல்லை. ஏனென்றால், அவர்களின் வீட்டுப் பாத்திரங்கள் கூட வழக்குச் செலவுக்காக விற்கப்படுகின்றன. மற்றவர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் கொலையாளிகள், வெளியே சுற்றித் திரிகின்றனர். ஆனால் சாமானியர்கள் சிறிய குற்றங்களுக்காக பல ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர்’ என்று உணர்ச்சி பூர்வமாக பேசினார்.