கவுகாத்தி: அசாம் எல்லையில் 6 பேர் கொல்லப்பட்டத்தை கண்டித்து மேகாலயாவில் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அசாம்-மேகாலயா எல்லையில் முக்ரோஹ் கிராமத்தில் அசாம் வனத்துறையினர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். அதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு வனக் காவலர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு மாநில எல்லைகளிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் மேகாலயாவுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்று அசாம் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில், சில மர்ம நபர்கள் சாலையில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர். மேற்கண்ட 6 பேர் கொலையை கண்டித்து மேகாலயாவில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் கான்ராட் சங்மாமோன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை எரித்தனர். இன்னும் சிலர் முதல்வரின் இல்லம் அமைந்துள்ள போலோ ஹில்ஸ் பகுதியில் முதல்வரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மேகாலயாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.