×

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளை கைப்பற்றி, போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே குட்ஷெட் பகுதியில் நேற்று தக்காளி வடிவிலான பந்து போன்ற ஒரு பொருள் நீண்ட நேரம் கேட்பாரற்று கிடந்தது. அங்கிருந்த வியாபாரிகள், அதனை எடுக்க முயன்றபோது மிகவும் கனமாக இருந்தது.

மேலும் அந்த பந்தை சுற்றி கயிறு கட்டப்பட்டிருந்தது. இதனால் வெடிபொருளாக இருக்கும் என சந்தேகமடைந்து, போலீசாருக்கு தகவல் தெரித்தனர். இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் சுனில்குமார், டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்ஐ வாசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மர்மமான பந்து போன்ற பொருளை கைப்பற்றி திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து அப்பொருளை மதுரைக்கு எடுத்து சென்று, உண்மையிலேயே இது வெடிபொருளா என கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். இதில் அப்பொருள் மீன் பிடிக்கும் பெரிய வலையில் மிதவைக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் பந்து என்பது தெரிந்தது.

முன்னதாக போலீசார் திண்டுக்கல் ரயில்நிலையம், குட்செட், தண்டவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். மேலும் ரயில்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் யாரேனும் சந்தேகப்படும்படியாக நபர்கள் வந்து சென்றார்களா என ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு போல் மர்மபொருள் கிடந்த சம்பவம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Dindigul ,station , Dindigul, railway station, bomb, mystery object, commotion
× RELATED திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிப்பு