புதுடெல்லி: டெல்லியில் போலீஸ் எஸ்ஐ-யுடன் தகராறு செய்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கானை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கான், மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. மேலும் அவர் ஷாஹீன் பாக் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆசிப் கான் மீது ஐபிசியின் 186 மற்றும் 353 பிரிவுகளின் கீழ் ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.