இளையான்குடி : இளையான்குடி வட்டாரத்தில் பள்ளிகள் முன்பாக வாகன நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுதால் வாகனங்களை ஒழுங்குபடுத்த பள்ளிகள் முன் போலீசாரை நியமிகக வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இளையான்குடி வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என சுமார் 120 பள்ளிகள் இயங்கி வருகிறது. காலை 8 மணி முதல் 9 மணிவரை பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளிகள் முடிந்து வீட்டிற்கு செல்வதும் வழக்கமாக உள்ளது.
மேலும் சில பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் கனரக வாகனங்கள், டூவீலர், ஆட்டோ, அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. இதே நேரத்தில் பள்ளி வாகனங்களும் வருவதால் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடி நிலையை அடைகிறது.
மேலும், அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல டூவீலர் மற்றும் ஆட்டோக்களில் அதிகமாக வருவதால் பள்ளிகளுக்கு முன்பு கூட்டம் அலை மோதுகிறது. அதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் அடைவதுடன் பள்ளி குழந்தைகள் திசையறியாது வாகனங்கள் உரசும் அளவிற்கு செல்கின்றனர். அதனால் தினமும் பாதுகாப்பற்ற முறையில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து வருகின்றனர். மேலும் பள்ளி கேட்டின் இருபுறமும் நின்று, தங்களது குழந்தைகளை மட்டும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் பெ்ற்றோர் கவனமாக உள்ளனர்.
அழைத்துச்செல்ல பெற்றோர்கள் வர இயலாத குழந்தைகளின் நிலை, போக்குவரத்து நெரிசலில் கேள்விக்குறியாக உள்ளது. பஆசிரியர்கள் சார்பில் காலை, மாலை நேரத்தில் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என, சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால் இளையான்குடி பகுதியில் எந்த பள்ளியிலும் இந்த உத்தரவினை இதுவரை பின்பற்றவில்லை. மாவட்ட மற்றும் வட்டார கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்ம் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
மேலும் பள்ளிகள் முன்பு விபத்துகள் நடைபெறாத வகையில், காலை, மாலை நேரத்தில் மாணவர்களின் வருகையின் போது, பெற்றோர்களையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்த, போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.