×

தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறைகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட சிறைகளில் ரூ.2.51 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட, மத்திய சிறைகளில், நீதித்துறை நடுவர் மற்றும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக்கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.

இதனிடையே, 12 மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல், பேரூரணி, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சேலம் - ஆத்தூர், நாகப்பட்டினம், வேடம்பட்டு, தேனி, திருப்பூர், தர்மபுரி மற்றும் கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட 12 மாவட்டச் சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்கள் ரூ.2 கோடியே 51 லட்சத்து 74 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ளன.

இதை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து  வைத்தார். நிகழ்ச்சியில்,  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர்  பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சிறைகள்  மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, தமிழ்நாடு  காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விசுவநாதன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் மாவட்டச் சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,CM ,M.K.Stalin , Tamil Nadu, 12 District Jails, Test Identification Parade Rooms, Chief Minister M.K.Stalin
× RELATED ‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழக மக்கள்...