சென்னை: சென்னை, மணப்பாக்கத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்துமீட்கப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள குழலி அம்மன் என்கின்ற கோலியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துகள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிலத்தை 12 ஆண்டுகளாக ஜெயபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கால்நடைகளை வளர்த்து பால்பண்ணை நடத்தி வந்துள்ளார்.
இந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என கண்டறியப்பட்டு, தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியர் கோயில் செயல் அலுவலர் சக்தியை தக்காராக நியமனம் செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று சென்னை மாவட்ட உதவி ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியோரின் உதவியோடு அந்த சொத்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 கோடி. வட்டாட்சியர்கள் காளியப்பன், வசந்தி, செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.