×

அருப்புக்கோட்டை அருகே சரமாரியாக வெட்டி 2 வாலிபர்கள் படுகொலை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சரமாரியாக வெட்டி 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனம்பட்டியை சேர்ந்தவர் சபரி என்ற சபரிமலை (30). குலசேகரநல்லூரை சேர்ந்தவர் ரத்தினவேல்பாண்டியன் (30). கடந்த 2 நாட்களாக இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் திருச்சுழி காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். 2 பேரும் உபயோகித்து வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில், கடைசியாக கிடைத்த சிக்னல் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே பி.தொட்டியாங்குளம் செல்லும் சர்வீஸ் ரோட்டின் கிழக்கே உள்ள முனியப்பசுவாமி கோயில் பகுதியை காட்டியுள்ளது. நேற்று இரவு போலீசார், அப்பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். இதில் கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ள பொட்டல் பகுதியில் சபரி மற்றும் ரத்தினவேல்பாண்டியன் இருவரின் உடல்களும் கிடந்தன. அவர்களது உடல் முழுவதும் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: திருச்சுழி அருகே உள்ள உடையனம்பட்டியை சேர்ந்தவர் ராக்கம்மாள். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர் தனது அக்கா மகள் சோலைமணியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். சோலைமணி நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அவரை உடையனம்பட்டியை மூர்த்தி என்பவருக்கு ராக்கம்மாள் திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்.

ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சோலைமணியும், மூர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பிரிவிற்கு ராக்கம்மாள்தான் காரணம் என எண்ணிய மூர்த்தி, கடந்த  12.03.2022 அன்று வீட்டில் தனியாக இருந்த ராக்கம்மாளை குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது தந்தை, தாய் தம்பி சபரி மற்றும் உறவினர் செல்வம் ஆகிய 5 பேர் மீது திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்தனர். இவர்களில் சபரி, செல்வம் மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் மூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் சபரி மற்றும் செல்வத்தின் நெருங்கிய உறவினர் ரத்தினவேல்பாண்டியன் ஆகிய இருவரும், ராக்கம்மாள் கொலைக்கு பழிக்குப்பழியாக தற்போது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். ரத்தினவேல்பாண்டியனுக்கு ராக்கம்மாள் கொலையில் எந்த தொடர்பும் இல்லை என்பதும், செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Aruppukkottai , 2 youths were killed in a barrage near Aruppukkottai
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...