காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் ரூ.65.28 லட்சமும், 332 கிராம் தங்கமும், 664 கிராம் வெள்ளியும் செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கையாக பணம், தங்க நகை, வெள்ளி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று கோயிலில் உள்ள இரண்டு நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.
உண்டியல் எண்ணும் பணிக்கு காஞ்சிபுரம் உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இப்பணியில் கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இதில், 65 லட்சத்து 28 ஆயிரத்து 071 ரூபாய் ரொக்கமும், 332.640 கிராம் தங்கமும், 664.290 கிராம் வெள்ளியும் இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது காமாட்சி அம்மன் தேவஸ்தான காரியம் சுந்தரேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.