×

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இன்று காலை 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்குள்ள 3 அலகுகளில் பல்வேறு பழுது காரணமாக இதுவரை மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் நிலையில் உள்ள 2வது அலகில் இன்று காலை கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஏற்கெனவே முதல் நிலையில் உள்ள 2 அலகுகளிலும் கொதிகலன் கசிவு மற்றும் கன்வேயர் பெல்ட் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, வடசென்னை அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் பழுது காரணமாக ஒட்டுமொத்தமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இவற்றை சீரமைக்கும் பணிகளில் அனல் மின்நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மொத்தமுள்ள 5 அலகுகளிலும் பழுதான கொதிகலன் குழாய் மற்றும் கன்வேயர் பெல்டுகளை அகற்றிவிட்டு, புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின் தயாரிப்பு இயந்திரங்களை நிறுவ வேண்டும் என அனல் மின்நிலைய ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags : North Chennai Thermal Power Station , 630 MW power generation affected in 3 units at North Chennai Thermal Power Station
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது...