கொடைக்கானல் : கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவிகளுக்கு இணையவழி
குற்றங்கள் (சைபர் கிரைம்) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நஸ்ருதீன் தலைமை வகிக்க, புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து மேரி, மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜ் முன்னிலை வகித்தனர்.நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.
சைபர்கிரைம் போலீசார் சதீஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் இணைய குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது, இணைய குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக நடப்பது, சமூகவலை தளங்களில் முன்பின் தெரியாத நபர்களை நண்பர்களாக இணைக்க கூடாது, லோன்ஆப்களில் லோன் வாங்க முயற்சி செய்யக்கூடாது, இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பணஇழப்பு ஏதும் ஏற்பட்டால் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சைபர் கிரைம் குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் அளிப்பது குறித்தும் விளக்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.