×

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உருவாக்கப்பட்டது: அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உருவாக்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக செய்தியர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் தான் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

1. எழுப்பட்ட வினா: ஏற்கனவே இதே பொருளில் பிறப்பிக்கப்பட்ட சட்டம்  அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பில் உள்ள விஷயங்கள் இந்த சட்ட முன்வடிவில்  சரியாக பதிலளிக்கப்படவில்லை. குறிப்பாக, Game of Chance and Skill என்ற வித்தியாசம் இல்லாமல் முழுமையான தடை என்பது, அரசியலமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g)-க்கு எதிரானதாகும்.

அளிக்கப்பட்ட பதிலின் சுருக்கம்:

* இந்த சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறதா என்பதை பொறுத்தவரை, அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ள பின்வரும் உள்ளீடுகளை கருத்தில் கொண்டே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
34. Betting and Gambling
1. Public Order
6. Public Health
33. Theaters and dramatic performances.

* இவை அனைத்தும் மாநிலப் பட்டியலில் (Seventh Schedule    List    II- State List – Entries 34, 1, 6, 33) உள்ளது என்பதை குறிப்பிட்டு அதனடிப்படையில் தான் இந்த சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது என்பதால், இந்த சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இந்த இணைய வெளி சூதாட்ட தடை சட்ட முன்வடிவு  அமைந்துள்ளது.
* ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசர சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. முகப்புரையில் (Preamble) இது குறித்தும், இப்பொருள் குறித்த வல்லுநர் குழு அளித்த அறிக்கை  மற்றும் பல்வேறு ஆராய்ச்சியின் அடிப்படையிலான தரவுகளையும் தெளிவாக குறிப்பிட்டுதான், இந்த அவசர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

2.    எழுப்பட்ட வினா: திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகளை தடை செய்யும் முடிவு என்பது அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ள 34-வது கூற்றில் அமையும் என்று குறிப்பிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது கருத்தில் கொள்ளப்படவில்லை.

அளிக்கப்பட்ட பதிலின் சுருக்கம்:

* ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசர சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. முகப்புரையில் (Preamble) இது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுதான், இந்த அவசர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது, என்பது நினைவு கூறத்தக்கது.

* நேரில் (ஆப்லைனில்) விளையாடும்போது யாருடன் மற்றும் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், ஆன்லைனில் (இணைய வெளியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் எழுதும் செயல்திட்டத்தின் (Programme) அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளது என்பதன் அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது.

எனவே, சூதாட்டம் என்கின்ற அடிப்படையில் இது அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூறு 34-க்கு உட்பட்டுதான் இந்த சட்ட முன்வடிவு அமைந்துள்ளது.

3. எழுப்பட்ட வினா: குறிப்பிடத்தக்க அளவு தடை (Proportional ban) மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி இந்த தடை அமைந்துள்ளது.

அளிக்கப்பட்ட பதிலின் சுருக்கம்:

* Doctrine of proportionality – No complete ban.  விளையாட்டுகள்  முழுமையாக தடை செய்யப்படவில்லை. Game of Chance and Skill என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தேவையான அளவில் மட்டுமேயான (proportional) தடைதான் ஆகும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Tags : Minister ,Raghupathi , The Online Rummy Prohibition Act was created on the basis of Constitution Act: Minister Raghupathi explained
× RELATED கச்சத்தீவை கொடுக்க கலைஞர்...