சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் தெற்கு கோபுர வாயில் இரண்டாம் பிரகாரத்தில் பெரிய கதவு ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் கோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு வந்த வாலிபர் ஒருவர், தெற்கு வாயிலின் உள்புறத்தில் உள்ள பெரிய கதவில் உள்ள இரண்டு பூட்டுகளையும் இரும்பு கம்பியால் உடைத்தார். சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள தீட்சிதர்கள், பொதுமக்கள் வந்து வாலிபரை பிடித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சிதம்பரம் அடுத்த மணலூரை சேர்ந்த ஆனந்தன் (30) என்றும், இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருவதும் தெரியவந்தது. சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, கோயில் பூட்டை உடைத்து திருட முயன்றதாக ஆனந்தனை கைது செய்தனர்.