சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டுமென ரூபி மனோகரன் ஆதரவு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து 3 பேர் காயமடைந்தனர். இதற்கு ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது.
போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் 15ம் தேதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி; மீண்டும் விளக்கம் அளிக்கும் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து, சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்படுகிறார். ரூபி மனோகரன் 15 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார். ஆனால் அது ஏற்றதாக இல்லை என முடிவு செய்துள்ளோம். கட்சி அலுவலகத்தில் நடந்தது குறித்து ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல.
அவர் உரிய பதில் அளித்த பிறகு அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும். அடுத்து நடைபெறவுள்ள குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கபடுகிறார் இவ்வாறு கூறினார். தமிழ்நாடு மாநில காங்கிரஸில் பொருளாளராக இருப்பவர் ரூபி மனோகரன். இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.