×

முரசொலி மாறன் 19ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

சென்னை: முரசொலி மாறனின் 19வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று அவரது சிலை, படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 19ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் இல்லத்தில் உள்ள முரசொலி மாறன் உருவ சிலைக்கு, நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல், திருவாரூர் காட்டூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலிமாறன் உருவப்படத்துக்கு கொரடாச்சேரி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் (எ) கலியபெருமாள் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை: நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் உருவ படத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தென்காசி கிழக்கு ஒன்றியம் குத்துக்கல்வலசையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், தனுஷ் குமார் எம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில், வடக்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் முரசொலி மாறனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.
சேலம்: சேலம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இடைப்பாடியில் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பூலாவரியில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டியில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தளிபிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் மேயர் சத்யா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
முரசொலி மாறனின் நினைவுநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:
டெல்லியில் திராவிடத்தின் முகம்; உலக அரங்கில் இந்தியாவின் முகம்; வளரும் நாடுகளின் சார்பில் வல்லரசுகளோடு வாதிட்ட திறனாளர்; அத்தனைக்கும் மேலாக கலைஞரின் மனசாட்சி! முரசொலி மாறன்  நினைவுநாளில் அவர் நினைவை போற்றுகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Murasoli Maran ,DMK ,Tamil Nadu , Murasoli Maran, 19th anniversary, Tamil Nadu, courtesy of DMK
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...