வாரணாசி: மோடி தொகுதியில் எந்த பணியும் நடக்கவில்லை என கூறி முட்டிபோட்டு ஊர்ந்து வந்து 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மனுவை அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி எம்பி தொகுதிக்கு (பிரதமர் மோடியின் தொகுதி) உட்பட சிக்ரா நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டிபோட்டு ஊர்ந்து வந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:
இந்த ஆண்டில் மட்டும் எங்களது பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் அரசு ஒதுக்கியது. ஆனால் இதுவரை எவ்வித பணியும் தொடங்கவில்லை. உரிய நேரத்தில் பணிகள் தொடங்கவில்லை என்றால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணம் மீண்டும் திரும்பி சென்றுவிடும். இதுவரை வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் கூட கோரப்படவில்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒதுக்கப்பட்ட நிதி பயன்பாடின்றி திரும்ப செல்ல வாய்ப்புள்ளது. இதனால் கவுன்சிலர்களாகிய எங்களுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவிடும். அதனால் நூதன முறையில் போராட்டம் நடத்தி மனு அளித்துள்ளோம்’ என்றனர்.