துரைப்பாக்கம்: மாணவர்கள் தான் பெற்ற வெற்றி பாதையை, மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும் என்று தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்தார். சென்னை கண்ணகி நகர் பகுதியில் நேற்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி மையம் துவங்கப்பட்டது. இந்த, மையத்தை தலைமை செயலர் இறையன்பு தொடங்கி வைத்து, தேசிய, மாநில அளவிலான ஜ.ஏ.எஸ், ஜ.பி.எஸ் ஆகிய உயர்நிலை படிப்பிற்கான பயிற்சி புத்தகங்களை வழங்கினார். மேலும், இந்த பயிற்சி முற்றிலும் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது: இந்த பயிற்சி மையத்தை ஒரு புள்ளியாக வைத்துக்கொண்டு, இப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு மாணவர்கள் அனைவரும் பயன்பெற முடியும். இதன்மூலம், கல்வியை தவிர எந்த ஒரு தவறான பழக்கமும் கண்ணகி நகர் மாணவர்களுக்கு தோன்றாது. மேலும், தான் பயின்று வெற்றிபெற்று விட்டால், அதை தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் பயனுள்ள வகையில் தெரியப்படுத்த வேண்டும். அடுத்த முறை நான் கண்ணகி நகருக்கு வரும்போது, நீங்கள் பேச வேண்டும், அதை நான் கேட்க வேண்டும். மேலும், உயர் கல்விக்கான படிப்பை பயிலும் ஏழை மாணவர்களுக்கு, இந்த பயிற்சி மையம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.