நாகர்கோவில்: போதிய தண்ணீர் வரத்து இல்லாததால், தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதிகளில் தாமதமாக கும்பப்பூ சாகுபடியை விவசாயிகள் செய்யும் நிலை இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம், தேரூர் உள்பட பல்வேறு இடங்களில் அக்டோபர் மாதத்தில் நடவு பணி முடிந்துவிட்டது. அதனை தொடர்ந்த தோவாளை சானல், அனந்தனார் சானல் மூலம் பாசன வசதி பெரும் பகுதிகளில் சாகுபடி முடிந்துள்ளது. குமரி மாவட்டத்தில் தெங்கம்புதூர் கடவரம்பு பகுதிகளில் சாகுபடி, அறுவடை வருடம் தோறும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த வருடம் கன்னிப்பூ அறுவடை அக்டோபர் மாதம் கடைசியிலும், நவம்பர் மாதம் தொடக்கத்திலும் நடந்தது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழையால் தெங்கம்புதூர் கடவரம்பு பகுதிகளான புல்லுவிளை, தெங்கம்புதூர், குளத்துவிளை பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெங்கம்புதூர் சானலில் தண்ணீர் விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற கலெக்டர் தெங்கம்புதூர் கடைவரம்பு சானலில் தண்ணீர் விட உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தற்போது தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில் கடைவரம்பு சானலில் தண்ணீர் வருவதையொட்டி கும்பபூ சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி பெரியநாடார் கூறியதாவது: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் உள்ள 400 ஏக்கர் வயல்களில் சாகுபடி, அறுவடை காலம் தாமதம் ஆகி வருகிறது. இதற்கு காரணம் கடைவரம்பு என்பதால் தண்ணீர் சீராக கிடைப்பது இல்லை. தற்போது கலெக்டரின் உத்தரவின் பேரில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. வயல்களில் நடவுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பதால், தொழிவிதைப்பு முறையில் நெல்விதைகளை வயல்களில் விதைத்து வருகிறோம். என்றார்.