கும்பகோணம் : கும்பகோணம் அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. கும்பகோணம் அருகே அம்மா சத்திரம் என்ற இடத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு சுரேஷ் என்பவர் அலங்கார நாற்காலிகள், சோபாக்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் சோபா தயாரிக்கும் ஆலையில் தீ மளமளவென பரவியது. இதனால் அங்குள்ள அனைத்தும் பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தகவலறிந்து கும்பகோணத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதில் மரபலகைகள் அதிகளவில் இருந்ததால் தீ வெகுவாக பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றது.