×

புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 96 குற்றவாளிகள் கைது.  2.71 கிலோ கஞ்சா, 75 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 12.94 கிலோ குட்கா, 1,112 சிகரெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,600 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 345 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து 8 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று 22.11.2022 போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை (DABToP -Drive Against Banned Tobacco Products) தொடர்பாக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று 22.11.2022 நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.71 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 75 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 89 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12.94 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 112 சிகரெட்டுகள் மற்றும் பணம் ரூ.2,600 பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று 22.11.2022 ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 345 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், 8 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 5 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 17.09.2022 முதல் 21.11.2022 வரை கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 508 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று 22.11.2022 மட்டும் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1 குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரித்துள்ளார்.



Tags : Commissioner ,Shankar Jiwal , Action to eradicate tobacco products: Commissioner of Police Shankar Jiwal warns
× RELATED மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!