×

போக்குவரத்து துறை ஊழியர்களின் கடனை வங்கி கணக்கில் பிடித்தம் செய்ய கூடாது: எம்டிசி அறிக்கைக்கு எதிராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக ஊழியர்கள் சிக்கன நாணய மற்றம் கடன் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அஸ்கர் அலி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சேமிப்பை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு கடன் வழங்கி உதவி செய்யவும், கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு கடன் வாங்கும் போது ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து கடன் தவணைத் தொகையை பிடித்தம் செய்து, மாதந்தோறும் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தின் கீழ் போக்குவரத்துக் கழகத்துடன், கூட்டுறவு சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த தவணை தொகையை முறையாக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தும் செய்து வழங்குவது இல்லை.

இதனால், நிதி நெருக்கடி ஏற்பட்டு, பிற ஊழியர்களுக்கு கடன் வாங்க முடியவில்லை. கடன் வாங்கிய ஊழியர்களும் அபராத வட்டி செலுத்த வேண்டியதுள்ளது. ஊழியர்களிடம் வசூலித்த தவணை தொகையை, போக்குவரத்து கழகமே வைத்துக் கொள்வதால், கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடு முடங்கி விடுகிறது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1999, 2007, 2016ம் ஆண்டுகளில் வழக்கு தொடர்ந்து,  உயர் நீதிமன்றம் உத்தரவின்படி முழு தொகையையும் போக்குவரத்து கழகத்திடம் இருந்து கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளது. தற்போது கூட எங்கள் சங்கத்துக்கு மாநகர போக்குவரத்து கழகம் சுமார் ரூ.56 கோடி பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் ஊழியர்களில் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக தவணை தொகையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்து வழங்கும் நிலையில் நிர்வாகம் இல்லை என்று மாநகர போக்குவரத்து கழகம் கடந்த அக்டோபர் 29ம் தேதி எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்துக்கு எதிரானது. கூட்டுறவு சட்டம் பிரிவு 48ன் கீழ் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, தவணை தொகையை போக்குவரத்து கழகம் தான் பிடித்தம் செய்து தர வேண்டும். எனவே, இந்த கடித்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக ஊழியர் கூட்டுறவு சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள்  நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகத்தின் கடிதத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Tags : ICourt ,MTC , Transport Department Staff, MTC Report, high Court Order
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு