இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவிடம் இருந்து பெற்ற தங்க பதக்கத்தை விற்றதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான் கான் பின்னர் அரசியலில் இணைந்து பிரதமரானார். கடந்த மார்ச்சில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பெரும்பான்மை இழந்ததால் பதவியை இழந்தார்.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அவருடைய எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ‘கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவிடம் இருந்து பெற்ற தங்க பதக்கத்தை இம்ரான் விற்றுவிட்டார். அவருடைய இச் செயல் சட்ட விரோதமானது இல்லை. ஆனால், உயர்ந்த தார்மீக நெறிகளுக்கு முரணானது,” என்றார்.