திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 19வது வார்டு எம்.எம்.டி.ஏ 2வது பிரதான சாலையில் மாநகராட்சி ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளி கட்டிடம் தற்போது பல இடங்களில் பழுதாகி உடைந்துவிழும் நிலையில் உள்ளது. தளத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழியாக மழைநீர் கசிந்து வகுப்பறையில் கொட்டுகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆசிரியர்களும் பாடம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்த ஆரம்பப் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என்று வார்டு கவுன்சிலர் காசிநாதன், மணலி மண்டல குழு கூட்டத்தில் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
“பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்’’ என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.