சென்னை: கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்வாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் உழவர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோடு 10.97 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். கடந்தாண்டு 20.22 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் 15ஆம் தேதிதக்குள் செய்துகொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து பெரும்பாலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் மறக்காமல் உடனடியாக சென்று பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்வாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று உழவர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது