சான் பிரான்சிஸ்கோ: போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை நீல நிற குறியீடு திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நிறுவனங்கள், தனிநபர்களை வேறுபடுத்தி காத்திடும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்படுத்த டிவிட்டர் திட்டம் தீட்டியுள்ளது. உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர்.
இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை(19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டுவிட்டர் புளூ செக்கிற்கு இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும். இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்டர் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ செக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறினார்.