சென்னை: ஆவடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (44). இவர் திருமலைராஜபுரத்தில் கடந்த சில வருடங்களாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்டுடியோவை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து, நேற்று காலை வழக்கம்போல் ஸ்டுடியோவை திறக்க வந்தார். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.60,000 மதிப்புள்ள கேமரா, ரூ.10,000 மதிப்புள்ள ஹார்ட் டிஸ்க் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதேபோல் சின்னம்மன் கோயில் பகுதியை சேர்ந்த முருகன்(48) என்பவரின், திருமலை ராஜபுரம் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் ரூ.3500 கொள்ளையடிக்கப்பட்டிருந்து. மேலும், அருகில் உள்ள ரேஷன் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். புகாரின்பேரில், ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.