பெரம்பூர்: பெரம்பூர் நீளம் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் சிராஜுதீன் (58), டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 19ம் தேதி மாலை பெரம்பூர் ரமணா நகரில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்க தனது இளைய மகளுடன் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, பீரோ சாவி வேறு ஒரு இடத்தில் இருப்பதைக் கண்டு பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த வீட்டிற்கு 2 வாசல்கள் உள்ளன. சிராஜுதீன் வெளியே செல்லும்போது ஒரு கதவை மட்டுமே பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பின் வாசல் வழியாக வந்து, பீரோ சாவியை எடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதுகுறித்து, சிராஜுதீன் திருவிக நகர் குற்றபிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவிக நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புக்கரசி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்ப நாய் பரத் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கைரேகை நிபுணர் உதவி ஆய்வாளர் வனிதா சம்பவ இடத்தில் சோதனை செய்து, கைரேகை மாதிரிகளை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.