புதுடெல்லி: வேறு சாதி வாலிபரை மணந்ததால் டெல்லி இளம்பெண்ணை தந்தையே சுட்டுக்கொன்று வீசியது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 18ம் தேதி சாலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேசுக்குள் இளம்பெண் சடலம் இருந்தது. பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருந்த அந்த சடலத்தின் முகம், தலையில் காயங்கள் மற்றும் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூட்கேசை மீட்ட போலீசார், கொலையான பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான பெண்ணின் புகைப்படம் அடங்கிய போஸ்டரை பல இடங்களில் ஒட்டினர்.
இதற்கிடையே, தெற்கு டெல்லி பாதர்பூர் பகுதியை சேர்ந்த நித்தேஷ் யாதவ் என்பவர் போலீசாரை தொடர்பு கொண்டு கொலையான இளம்பெண் தனது மகள் ஆயுஷி யாதவ் (21) என தெரிவித்தார். அவரும் அவரது மனைவியும் சடலத்தை பார்த்து அடையாளம் காட்டினர். இதையடுத்து கொலையாளியை கண்டுபிடிக்க தெற்கு டெல்லி பாதர்பூர் பகுதியில் இருந்து உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பெற்ற மகளை நித்தேஷ் யாதவ் தான் சுட்டுக்கொன்று பிளாஸ்டிக் கவரில் கட்டி, சூட்கேசில் அடைத்து மதுராவில் உள்ள யமுனை சாலையில் வீசியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நித்தேஷ் யாதவ், அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நித்தேஷ் யாதவின் சொந்த ஊர் உபி கோரக்பூர். அங்கிருந்து டெல்லி சென்ற அவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவரது மகள் ஆயுஷி யாதவ், பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சாதியை சேர்ந்த சத்ரபால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நித்தேஷ் யாதவ் மகளை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் மேலும் லைசென்ஸ் பெற்ற தனது துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொன்றார். இதையடுத்து சிவப்பு நிறத்தில் மிகப்பெரிய சூட்கேஸ் வாங்கி உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து அதை சூட்கேசில் அடைத்து மதுரா சாலையில் வீசிச்சென்று இருப்பது தெரிய வந்தது. மகளை கொன்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட நித்தேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவியிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.