தேனி: தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக, அவரது மேலாளர் வனத்துறை அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கோம்பைக்காடு பகுதியில் உள்ளது. இத்தோட்டத்தில் உள்ள சோலார் மின்வேலியில் கடந்த செப்.28ம் தேதி ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக ரவீந்திரநாத் எம்பி மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தோட்டத்தை தனது மேலாளர் கிருஷ்ணாதான் நிர்வகித்து வந்ததாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணா நேற்று தேனி வனச்சரகர் செந்தில்குமார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.