சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக சிறப்பு புலனாய்வு குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ல் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம், கொலையாளிகள் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார். விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.