சென்னை: தமாகா ஆசிரியர் அணி தலைவர் ராஜமோகன் மறைவுக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமாகா ஆசிரியர் அணி தலைவர் ராஜமோகன் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. காமராஜர் காலந்தொட்டு தேசிய இயக்கத்தில் இணைந்து, மாணவர் பருவம் முதல் அரசியல் களத்தில் இறங்கி செயல்பட்டவர். குறிப்பாக ஜி.கே.மூப்பனாரின் தலைமையை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு வலு சேர்க்கும் வகையிலே பாடுபட்டவர். தமிழ் இலக்கண, இலக்கியத்தில் சிறந்து விளங்கியவர். எழுத்தாளர், பல்வேறு புத்தகங்களை வெளியிட்டவர். தமாகா வளர்ச்சிக்காக முக்கியப் பங்காற்றி, தனது இறுதி மூச்சு வரை உறுதுணையாக செயல்பட்டவர். அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.