அசம்கர்: உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் அவரது தலையை துண்டித்து குளத்தில் வீசிய காதலனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டம் கவுரி கா புரா என்ற கிராமத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை அதேபகுதியில் இருந்த கிணற்றிலும் வீசப்பட்டு இருந்தது. இந்த கொலைச் சம்பவம் டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம் போல் இருந்ததால் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் எஸ்பி அனுராக் ஆர்யா கூறுகையில், ‘வளைகுடா நாடான ஷார்ஜாவில் மரம் வெட்டும் தொழிலில் பிரின்ஸ் யாதவ் (25) ஈடுபட்டு வந்தான். அவனுக்கும் கவுரி கா புரா கிராமத்தை ஆராதனா (21) என்ற பெண்ணுடன் காதல் இருந்தது. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரியில் ஆராதனாவுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்து முடிந்தது. ஷார்ஜாவிலிருந்து அவரது சொந்த ஊருக்கு திரும்பிய பிரின்ஸ் யாதவ், தனது கணவரின் வீட்டில் இருந்த ஆராதனாவிடம் பேச முயன்றார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்காததால் தனது காதல் விவகாரம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் ஆராதனாவை தீர்த்துக் கட்ட ஒப்புக்கொண்டனர். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் அஷ்ரப்பூரில் வசிக்கும் பிரின்ஸ் யாதவின் தாய் மாமன் மகன் சர்வேஷ் இருந்துள்ளான். கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த ஆராதனாவை, வலுக்கட்டாயமாக தனது தாய் மாமாவின் கரும்பு தோட்டத்திற்கு பிரின்ஸ் யாதவ் இழுத்துச் சென்றான். அங்கு சர்வேஷ் மற்றும் பிரன்ஸ் யாதவ் ஆகிய இருவரும் ஆராதனாவை கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் ஆராதனாவின் உடலை 6 துண்டுகளாக ெவட்டி பாலிதீன் பையில் அடைத்தனர். துண்டிக்கப்பட் தலையை மட்டும் சிறிய தொலைவில் இருந்த குளத்தில் வீசி எறிந்தனர்.
உடல் பாகத்தை கவுரி கா புரா கிராமத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் வீசியெறிந்துவிட்டு தப்பிச் சென்றனர். கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து தனிப்படை போலீசார் அந்த இடத்தை சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி பிரின்ஸ் யாதவ் துப்பாக்கியால் சுட்டான். தனிப்படை போலீசார் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் பிரின்ஸ் யாதவை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பிரின்ஸ் யாதவிற்கு காயம் ஏற்பட்டது. காதலியின் கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்த பிரின்ஸ் யாதவின் தாய் மாமன் மகன் சர்வேஷ் தலைமறைவாக இருப்பதால் அவனை தேடி வருகிறோம். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உறவினர்கள் பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா யாதவ் ஆகியோரை தேடி வருகிறோம். ஒரு கொலை வழக்கில் காதலன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்றார்.