சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரபிரதேசத்தின் காசி வாரணாசிக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய கலாசார தொடர்பை புதுப்பிக்க காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமரை வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அவரை உற்சாகப்படுத்துவதற்கு மாறாக, தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரானவர் போல சித்தரிப்பது தவறு. விமர்சனம் என்பது நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே உள்ளது.
தமிழ் மொழி மிகுந்த வலிமையுடன் எழுச்சியுடன் பூர்வீக பெருமையுடன் உலக மொழிகளில் மூத்த மொழியாக விளங்குகிறது. 13 கோடி மக்களின் உயர் மொழியாக மிக ஆரோக்கியமாக சீரும் செழிப்பும் கொண்ட தமிழ் மொழியை ஒப்பிடும்போது சமஸ்கிருதம் பொலிவிழந்து இருப்பதை உலகறியும். அத்தகைய மொழிக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது தவறல்ல. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.