×

புயல் எச்சரிக்கை எதிரொலி: டெல்டாவில் 27,500 மீனவர்கள் வீடுகளில் முடக்கம்

வேதாரண்யம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் டெல்டாவில் 27,500 மீனவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்று தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்- ஓங்கோல் இடையே வலுவிழக்கும் வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்யும்.

புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைகாற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாகை துறைமுகத்தில் நேற்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இன்று 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் 300 விசைப்படகு, 3,500 பைபர்கள் படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன் தீவு மீனவர்கள் 6வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை.

மேலும் துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பழையாறு, கொடியாபாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார், மரவாமேடு, வானகிரி, தரங்கம்பாடியை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் 3,000 விசைப்படகு, 7,000 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 2,500 மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2 மீன்பிடி இறங்கு தளங்களில் 570 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காரைக்கால் துறைமுகத்தில் இன்று 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. 14 மீனவர்கள் கைதை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் ஏற்கனவே கடந்த 5 நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 700 விசைப்படகு, 500 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டெல்டா மீனவர்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் மீனவ தொழில் சார்ந்த தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். ேமலும் ஒரு சில மீனவர்கள் தங்களது வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Delta , Storm warning echoes: 27,500 fishermen in Delta stranded
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு