சென்னை: திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. அன்னை இல்லம் பாசமலர், பார் மகளே பார், உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள தாஸ் என்ற பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். திரையுலகில் மார்க்கெட்டில் இருக்கும் நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல், தன்னையும் முன்னிறுத்திக்கொள்ளாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, 2022ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஆரூர்தாஸுக்கு வழங்கப்பட்டது.
முதல்வர் இரங்கல்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:1000் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி ஆரூர்தாஸ்சின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.