×

சென்னையில் 54 ஜோடிகளின் திருமண விழா ஏழையின் சிரிப்பில் கலைஞர், அண்ணாவை காண்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:சென்னையில் மாற்று திறனாளிகள் உள்ளிட்ட 54 ஜோடிகளுக்கு திருமணத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடத்தி  வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது, நான் மேயராக பொறுப்பிற்கு வந்தேன். அப்போதே மழை ஆரம்பித்தது, இருபது நாட்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போது முதல்வர் கலைஞரும், நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சொன்னார். உடனே மாநகராட்சி வாகனத்தில் கலைஞரை அழைத்து கொண்டு, சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம்.

காரில் போய்க் கொண்டிருக்கும்போது வேடிக்கையாக சொன்னார், ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று சொன்னார். அதுபோல, இப்போது குடிநீர் பிரச்சனையே இல்லை. அந்த அளவுக்கு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை எப்படி சமாளித்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே கடந்த ஆண்டு மழை பெய்த போது என்ன நிலை. அதுவும் உங்களுக்குத் தெரியும். இப்போது என்ன நிலை; நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் தான் முடித்திருக்கிறோம், அதற்கே மக்களிடமிருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக்கிறது.

அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்லி, நாட்டில் இப்போது எப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஆட்சி தான், உங்கள் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக உடல் நலிவு ஏற்பட்டாலும்.

அதைப்பற்றி கவலைப்படாமல் நான் இன்றைக்கு என்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்று அண்ணா சொன்னார். நான் இப்போது சொல்கிறேன், ஏழையின் சிரிப்பிலே கலைஞரைக் காண்போம், அண்ணாவையும் காண்போம் என்ற நிலையில் நம்முடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chennai ,Anna ,Chief Minister ,M.K.Stal , Marriage ceremony of 54 couples in Chennai, we will see artist, Anna in the smile of the poor: Chief Minister M.K.Stal's speech
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!