×

சென்னை விமான நிலையத்தை நவீனமாக்கும் வகையில் ரூ.2,467 கோடியில் கட்டப்படும் பணிகளை ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் ஆய்வு: நவீன கட்டிடத்தின் முதல் பகுதி டிசம்பரில் திறப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த நடந்து வரும் பணிகளை ஒன்றிய விமான போக்கு வரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று ஆய்வு செய்தார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக ரூ.2,467 கோடியில்,2,20,972 சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய விமானநிலையத்தின் முதல் கட்டிடம், வரும் டிசம்பரில் திறக்கப்படுகிறது.

ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார். சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, சர்வதேச முனையங்களை இணைத்து, புதிய நவீன முனையம் அமைக்கும் பணி, கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.2,467 கோடி மதிப்பீட்டில், 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பணிகள் திட்டமிடப்பட்டன. இந்த பணிகள் பகுதி 1 மற்றும் பகுதி2 என்று இரு பணிகளாக நடத்தி முடிக்கப்படுகிறது. முதல் பகுதியில், 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், புதிய நவீன வருகை, புறப்பாடு முனையம் ஜி2 ஆகியவைகள் உட்பட பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுன்டர்கள், விவிஐபிக்களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள், இந்த முதல் பகுதியில் அடங்குகிறது.

இந்த முதல் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள், அதிநவீன புதிய விமானநிலையத்தின் முதல் பகுதி கட்டுமான திறப்பு விழா நடக்கவிருக்கிறது. இதையடுத்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று மதியம், டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அதன்பின்பு திறப்பு விழாவிற்கு தயாராகிக்கொண்டிருக்கும் புதிய அதி நவீன முனையத்தை ஆய்வு செய்தார். அதோடு அதிகாரிகளிடம் சில விளக்கங்களையும் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து நடத்தி முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு இந்த புதிய முனையம் ஜி 2 செயல்பாட்டிற்கு வந்ததும், தற்போது சர்வதேச முனையத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஜி3 பழைய முனையம் சுமார் 42,300 சதுர அடி கட்டிடம் இடிக்கும் பணிதொடங்கும். அதன்பின்பு அந்த இடத்தில் பகுதி 2 கட்டிடப்பணி மேற்கொள்ளப்படும். இதையடுத்து சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024 டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது. இவ்வாறு சென்னை விமான நிலைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union Minister ,VK Singh ,Chennai airport , Chennai Airport, Rs 2,467 crore construction project, Union Minister VK Singh inspected
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...