திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்துல் சலாம் (54), அபூபக்கர்(55), ரொகியா(65), சைனபா(54). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள பாரதப்புழா ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை இவர்கள் உள்பட 6 பேர் ஒரு தோணியில் மீன் பிடிக்க ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இவர்களில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.
இது குறித்து அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் ரொகியா மற்றும் சைனபா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.நேற்று 2வது நாளாக மீட்பு பணி நடந்தது. அப்போது அப்துல் சலாம் மற்றும் அபூபக்கர் ஆகிய இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.