×

பிஏ மாணவரை தாக்கிய எம்ஏ மாணவர்கள்: 4 பேர் சிறையில் அடைப்பு

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவரை தாக்கிய சீனியர் மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் திருமலைகிரியை சேர்ந்தவர் விக்னேஷ் (18), சேலம் அரசு கலைக்கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் கல்லூரியின் நுழைவாயில் பகுதியில் நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 மாணவர்கள், திடீரென விக்னேசை சைக்கிள் செயினை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மாணவர் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அதே கல்லூரியில் எம்ஏ படித்து வரும் மாணவர்களான அஜித் (22), கௌதமன் (22), தீனா (22), விக்னேஷ் (22) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 4 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சீனியர்களான தங்களுக்கு மரியாதை கொடுக்காததால் தாக்கியதாக தெரிவித்தனர். பின்னர், கைதான 4 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.


Tags : 4 MA students jailed for assaulting BA student
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை