கும்பகோணம்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததைபோல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா.
இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால்தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும். கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு அறிவித்தது வரவேற்கத்தக்கது.
இதனால் நான் திமுக கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு தினகரன் கூறினார்.